குழந்தை - கதை வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்

- Aug 13
- 2 min read

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு
சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)
உவமானங்களும் உவமைகளும்
கதையமைப்பும் கருத்துகளும்
குழந்தை
உயிர்மெய்யார்
13.08.2025
மெல்பர்ன்
கதைச்சுருக்கம்
தயாளன் ஒரு் போலீஸ்காரர். ஒரு குழந்தையை யாரோ கோவிலுக்கருகே போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். கடைக்காரரிடம் தன் செல்பேசியில் உள்ள அந்தக் குழந்தையின் படத்தைக் காண்பித்துக் கேட்கிறார். தெரியாது என்கிறார். கம்பு புடைத்துக் கொண்டிருக்கும் பெண்களிடம் கேட்கிறார். தெரியாது என்கிறார்கள். தயாளன் மனைவி உங்களுக்கு ஏன் வேலையத்த வேலை என சலித்துக்கொள்கிறாள். குழந்தையின் கழுத்தில் இருந்த நகைக்காக, தாய் அசந்து போயிருந்த போது, இப்படி செய்துவிட்டார்களோ? விடுமுறை நாளிலும் தேடுகிறான்.
குறி சொல்லும் பொன்னம்மாவிடம் கேட்டால், ‘அவ எல்லைய தாண்டிப் போயிட்டா. முயற்சிய விட்டுடு” என்றார். குழந்தையை மகாலட்சுமி இல்லத்தில் ஒப்படைக்கப்போனதை நினைத்துக் கொள்கிறான்.
ஒரு வாரம் கழித்து, தயாளனோடு வேலை செய்யும் கந்தசாமி, அவரது மாப்பிள்ளை மூலமாக டிஜிட்டல் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் போட்டதில் ஒருவருக்கு அந்தக் குழந்தை பற்றித் தெரிய வந்தது. அவரைப் பார்க்கச் செல்கிறார்கள். அவர் சொன்னார். இந்தக் குழந்தையின் அம்மா தன் வீட்டில் வாடகைக்கு இருந்ததாகவும், அவர் வாடகையை கொடுக்கவில்லையென்றும் சொல்கிறார். அவரது கணவர் பிள்ளையைக் கொடுத்துவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய்விட்டாராம். மாட்டுத்தரகர் ஒருத்தர் அந்த அம்மாவுக்குச் சொந்தம் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போகிறார். நல்லவன்னு நம்பி ஒருத்தனைக்கட்டிகிட்டு வந்தாள் என்றும், அவன் குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டான் என்றும், அதற்குப் பிறகு பம்பாயிலிருந்து ஒருத்தன், பிள்ளை இல்லாமல் வந்தால் கட்டிக்குவேன் என்று சொன்னதால், பிள்ளையை கோயிலிலில் விட்டுவிட்டு அவனோடு ரயில் ஏற்றி விட்டதாகவும் சொல்கிறார்.
தாயின் கதையைத் தெரிந்துக்கொண்டு, பிள்ளை எங்கிருக்கிறது என்று சொல்லாமல் திரும்பி வந்தார் தயாளன்.
கதை வாசிப்பு அனுபவம்
பாவண்ணன், எளிய காட்சிகளில் உவமானங்களைப் பின்னும் வித்தைத் தெரிந்தவர். ஒரு குழந்தை கோவிலில் அநாதையாகக் கிடக்கிறது. அதைத் தயாளனும் மற்ற போலீஸ்காரர்களும் இணைந்து, காப்பாற்றி, ஓர் இல்லத்தில் ஒப்படைக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு நிச்சயம் ஒரு தாய் இருந்திருக்க வேண்டும். ஒன்று அந்த தாயிடமிருந்து திருடி யாராவது இங்கு வந்து போட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் அந்தத் தாயும் இந்தக் குழந்தையைத் தேடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்தத் தாயே இந்தக் குழந்தையை கோவிலில் வந்து போட்டிருக்க வேண்டும். குழந்தை இங்கே. தாய் எங்கே? என்று தயாளன் தேடிக் கொண்டிருக்கும் போது, சில பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். “ஓம் புருஷன் பசுமாடு தான் (தாய்) வாங்கிட்டு வந்தானா? கன்னுகுட்டி (குழந்தை) வாங்கிட்டு வரலயா?” “இல்ல… நம்ம வீட்டுக்கு வந்து பொறக்குற கன்னுகுட்டி தான் ராசின்னு வெறும் மாடு மட்டும் தான் வாங்கிட்டு வந்தார்” என்று உரையாடல் நீள்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கதையின் கடைசியில், அந்த சிறு வயது தாயை, இரண்டாம் திருமணம் செய்ய வைக்க அவளது அண்ணன் முயற்சிக்கிறார். ஆனால் குழந்தை இல்லாமல் வந்தால் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதால், அவளை பம்பாய்க்காரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்து அனுப்பி விடுகிறார். அதாவது அந்தக் கன்னுகுட்டி வேண்டாமாம். ராசியில்லையாம். அவன் வீட்டிற்குச் சென்று, அவனுக்குப் பிறக்கும் கன்னுகுட்டி (குழந்தை) தான் வேணுமாம். அதை முதற் காட்சியிலேயே உவமானமாகச் சொல்லியிருப்பார்.
கதையில் மனிதநேயத்தின் உணர்வை மெல்லியதாக எடுத்துச் சொல்லியிருப்பார். அந்தப் பெண்களில் ஒருத்தி, “என்னுட்ட குடுங்க சார். என் பசங்க நாலு பேரோட அஞ்சாவதா இதையும் வளர்த்துட்டுப் போறேன்” என்பாள். அதை விட தயாளன் (பெயருக்கேற்றார் போல்), தயாள குணத்தோடு எப்படியாவது தாய் எங்கிருக்கிறாள் என்று பார்த்து குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று அலைந்துக் கொண்டேயிருப்பார். தன்னலமற்ற மனிதநேயத்திற்கு சரியான எடுத்துக்காட்டு அந்தக் கதாபாத்திரம்.
சமூகவலைத்தள தொழிற்நுட்பத்தின் வழி, ஒரு தொடர்பு கிடைத்து, மாட்டு புரோக்கரை (அந்தத் தாயின் அண்ணன்) அணுகிவிடுவார். சமீபத்திய தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டை சற்றேத் தொட்டுச் செல்வார்.
கடைசியில் ஓர் உவமானத்தோடு நிறைவு செய்வார். குழந்தையின் அம்மாவின் அண்ணன் மாட்டு புரோக்கரைப் பார்க்கப்போகும் போது, பூவரசு மரத்தடியில் ஒரு கன்றுகுட்டி கட்டப்பட்டிருந்தது என்று எழுதுவார். என்ன வேணும், “பசுவா? காளையா? கன்னுக்குட்டியா?” என்று கேட்பார். அதாவது அப்பனா, அம்மாவா, குழந்தையா? என்று கேட்பது போல இருக்கும்.
ஓர் உவமை மட்டும் மனதிலிருந்து விலகவே மறுக்கிறது. அந்தக் குழந்தையின் “விரல்கள் குண்டுமல்லி அரும்புகளைப் போல இருந்தன” என்பது நெஞ்சை என்னவோ செய்துக்கொண்டேயிருக்கிறது.
குழந்தை! - பஞ்சு
மெத்தை!!
******



Comments