top of page

பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்

Updated: 2 days ago



பாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம்

தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி 

சீண்டிய தோல்வியை சீரழித் திடவே சிரித்தான் கவலை வற்றி - தடைத்

தாண்டியே போக தினமும் கொண்டான் திலகம் இட்ட நெற்றி

 

பாட்டியும் சொன்னாள் பாரினில் வெற்றி தனி ஒரு நபருக்கில்லை - பலர்

கூட்டமாய் கொள்வது மட்டுமே வெற்றி மற்றது வெற்றி இல்லை

நாட்டினில் தனி நபர் வெற்றி கொள்வது சகஜம் என்றான் பாண்டி - இல்லை

ஏட்டினில் உள்ளதை மாற்றி அமைத்திடு நல்லது என்றாள் பாட்டி.

 

ஊரினில் பொங்கல் திருவிழா வருது ஓட்டப் பந்தயம் இருக்க - நான்

ஓடியே முதலில் சீறியே வருவேன் வெற்றிக் கனியை பறிக்க 

என்றவன் பாண்டியன் கூடவே ஓடிட எட்டு பேர் நின்றனர் கோட்டில்

வென்றவன் பாண்டியன் நின்றவர் மகிழ்ச்சியை எப்படிச்சொல்வது பாட்டில்?

 

சிறப்பிது பாண்டியா என்றனர் ஊரார் கண்களில் நீரைத் தேக்கி - அவன்

சிங்கத்தின் பார்வை கொண்டிட சிலிர்த்தான் இரண்டு கைகளைத் தூக்கி

பாட்டியோ சின்ன புன்னகை கூட உதிர்க்கவில்லை ஏனோ? - அவன்

போட்டியாய் ஓடி ஜெயிச்சது எல்லாம் போனதே, எல்லாம் வீணோ?

 

முதியவர் இருவரை கோட்டினில் நிறுத்தி மூவரும் ஓடச் சொன்னார் - இது

சதியென மற்றவர் நினைத்திட பாண்டியன் சட்டென கோட்டில் நின்றான்.

ஒன்று இரண்டு மூன்று என்றதும் பாண்டியன் ஓடியே வென்றான். - ஆனால்

நன்று இதுவல்ல என்று ஊரார் மௌனம் ஏனோ ஆனார்.

 

கையைத் தட்டி மகிழ்ந்த கூட்டம் அமைதியாய் ஆனது ஏனோ? - என

ஐயமும் வருத்தமும் கூடிட பாண்டியன் கலங்கியே நின்றுவிட்டானோ?

வையமும் வாழ்த்திடும் சொல்வதைக் கேளென பாட்டியே தேற்றி னாளே - நீ

மையமாய் நின்றுகொள் என்று சொல்லியே நல்லொளி ஏற்றினாளே!

 

இருவரின் கைகளை இறுக்கிப் பிடித்தே இறுதிக் கோட் டைந்தான் - அந்தச்

சிறுவனின் சிறப்பினை ஊரார் மெச்சி உச்சி முகர்ந்திட்டார்.

ஒருவரின் வெற்றி வெற்றியல்ல என பாண்டியன் புரிந்துக் கொண்டான். - ஒரு

குழுவினர் வெற்றியே வெற்றியென அவன் பாட்டி புரிய வைத்தாள்.


  ************

 படிப்பினை: வெற்றி, சாதனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வெற்றி, குழு செயல்பாடு, 

 பாடல் ஆசிரியர்: உயிர்மெய்யார்


Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page