top of page

வள்ளல் - கதை வாசிப்பு அனுபவம்

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு

சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)

 

உவமானங்களும் உவமைகளும்

கதையமைப்பும் கருத்துகளும்

 

வள்ளல்

 

உயிர்மெய்யார்

11.08.2025

மெல்பர்ன்

 

முதலில் கதைச் சுருக்கம். பிறகு மெல்பர்ன் வாசகர் வட்டத்தில் நடந்த உரையாடலின் பகுதி.

 

கதைச் சுருக்கம்

 

பன்னீர், தங்கமணி இருவரும் மாமன் மச்சான்கள். இரயில் வரும் தண்டவாளம் அருகே நின்றுகொண்டு ஒருவரையொருவர் கேலி பேசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பன்னீர் படிப்பை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கிற பையன். தங்கமணி, படித்துக் கொண்டு விடுமுறையில் மாடு மேய்க்கிறப் பையன். பன்னீர் எப்பொழுதும் தங்கமணியை மட்டம் தட்டியே பேசுவான். ரங்கசாமி இன்னொரு மாடு மேய்க்கிற பையன். ‘எம்ஜிஆரைப் பார்க்கலாம்’ என்று யாரோ சொன்னதில், ரயிலில் வருவார்கள் என தங்கமணி காத்திருக்க, ‘சினிமாக்காரங்க ஏமாத்துவாங்க’ என்று பன்னீர் சொல்ல வாக்குவாதம்.

 

மீனாட்சி ஆயா, வேலமரத்தடியில் பலகாரம் விற்கிறாள். தங்கமணி, பன்னீர் மற்றும் ரங்கசாமி மூவரும் ஆயாவிடம் அரிசி உருண்டை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ‘அந்த காலத்துல பாலையாவை நா பாத்திருக்கேன்’ என்று ஆயா சொல்கிறாள். பன்னீர் அவளையும் கேலி செய்கிறான். தங்கமணிக்குக் கோபம் வருகிறது. பாலையா நடித்த பல சினிமாக்களின் பெயர்களையும், கதாபாத்திரங்களையும் வரிசையாக ஆயா எடுத்துச் சொல்ல பன்னீர் மன்னிப்புக் கேட்கிறான். ‘சரி! பாலையாவ எங்க பாத்த?’ என்ற கேள்விக்கு, ‘பாலையா அங்க ஒரு படம் எடுக்க வந்தப்ப, என்னிடம் பேசி குடுத்த நூறு ரூபாவுல தான் வீடு கூரைய மாத்துனேன்’ என்றாள் ஆயா.

 

அதுக்கு ரங்கசாமி, கூரை மாத்துனதுக்குப் பதிலா ஒரு கறவு மாடு வாங்கியிருந்தா இப்போ ஒரு மாட்டுப் பண்ணையே இருக்கும் என்றும், ரெட்டியாரு மாடு, படையாச்சி மாடுகளோட ஆயாவூட்டு மாட்டையும் மேய்ச்சியிருக்கலாம் என்று யோசனைச் சொன்னான். இடையிடேயை சிலர் ஆயாவிடம் வந்து தோசையும் பலகாரமும் வாங்கித் தின்கிறார்கள். மாடுகள் பள்ளத்தில் இறங்கப் போக, பன்னீர், தங்கமணி, ரங்கசாமி மூவரும் ஒடிப்போய் தடுத்து நிறுத்துகிறார்கள்.

 

‘எம்ஜிஆர் வந்தா என்னடா கேப்பீங்க’ என்ற ஆயா கேள்விக்கு ‘குடுக்கறத வாங்கிக்கனும்’ என்று ரங்கசாமியும் ‘அம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு ஐநூறு ரூபா’ என்று பன்னீரும் ‘படிக்க வைக்க கேப்பேன்’ என தங்கமணியும் சொல்ல ஆயா இலவசமாக அவர்களுக்கு அரிசி உருண்டைகளை எடுத்துக் கொடுக்கிறாள். எம்ஜிஆர் மிகப்பெரிய கொடை வள்ளல், வாரி வழங்குவார் என்று அவர்களுக்குத் தெரிந்த தரவுகளை எல்லாம் சொல்கிறார்கள். ‘எம்ஜிஆர் நூறு ரூபா கொடுத்தா என்ன செய்வீங்க?’ என்ற ஆயாவின் கேள்விக்கு, ‘பிரியாணி, சினிமா’ என ரங்கசாமியும் ‘அம்மாவிடம் குடுத்துவிடுவேன்’ என பன்னீரும், ‘பள்ளிகூடம் போக சொக்கா வாங்குவேன்’ என தங்கமணியும் சொன்னார்கள்.

 

பன்னீர் மறுபடி தங்கமணியிடம் வம்பிழுக்க, இருவருக்கும் சண்டை மூள, ரங்கசாமி விலக்கிவிடுகிறான். தங்கமணி மாடுகள் பக்கம் போய் ஒரு செனை மாட்டிற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு திரும்புகிறான். அப்பொழுது மூன்று கார்கள் கிராஸிங் பக்கம் வந்து நின்றன. அதில் ஒன்று எம்ஜிஆர் கார். அவனுக்கு எம்ஜிஆர் ஒரு பையில் சில ஆப்பிள்களை எடுத்துக் கொடுத்து, ‘நல்லா படிக்கனும்’ என்றதும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிராஸிங் சங்கிலிகளை அவன் எடுத்து விட, கார்கள் பறந்தன.

 

‘எம்ஜியாரு போறாருடா டேய்….’ என தங்கமணி கூச்சல் எழுப்பிக்கொண்டே ஓடி வந்தான். முதலில் மற்றவர்கள் நம்பவில்லை. பிறகு தங்கமணி நடந்ததைச் சொன்னான். பையிலிருந்த ஒரு ஆப்பிளை ரங்கசாமிக்குக் கொடுத்தான். இன்னொன்றை ஆயாவுக்குக் கொடுத்தான். மூன்றாவதை, ‘பன்னீர், ஒங்க அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையில்ல, அவுங்களுக்குக் குடு’ என்று கொடுத்தான். இன்னொன்று பாக்கி இருந்தது. ‘இத செனை மாட்டுக்குக்கு குடுக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டு தங்கமணி ஓட, பன்னீரும் ரங்கசாமியும் பின்னால் ஒடுகிறார்கள் என்று கதை நிறைவுறுகிறது.

 

உவமானங்கள்


ஆயாவிடம் தோசை வாங்கித் தின்று விட்டு கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, பன்னீர், தங்கமணி, ரங்கசாமி மூவரையும் பார்த்து, “எந்த தெரு பசங்கடா நீங்க?” என்று கேட்கிறாள். ரங்கசாமி, “ம்….மோட்டுத்தெரு” என்கிறான். அந்தப் பெண்மணி போகும் வரைக் காத்திருந்து விட்டு, “எதுக்குடா பொய் சொன்ன?” என்று தங்கமணி கேட்கிறான். ரங்கசாமி பதில் சொல்லாமல் முறைத்து மட்டும் பார்க்கிறான். ரங்கசாமி பொய் சொல்கிறான் என்றால் அவர்கள் மேட்டுத் தெருவிலிருந்து வரவில்லை என்று பொருள். பையன்கள் எந்த சமூகத்திலிருந்து வருகிறார்கள் என்பதை எவ்வளவு நாசுக்காக கதாசிரியர் சொல்கிறார் பாருங்கள். தமிழ்ச் சூழலில், கிராமங்களில், ஊர் என்றும் சேரி என்றும் பிரிவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். புயல், மழை, வெள்ளம் என்று எது வந்தாலும் பாதிப்பு வராத அளவுக்கு மேட்டுத் தெருவில் வசதியான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதற்குத் தான் ஊர் என்று பெயர். உடனே பாதிப்பு வரக்கூடிய அளவுக்கு பள்ளத்தில் இருப்பவர்கள் ஏழைகள். உழைக்கும் மக்கள். அந்தப் பகுதிக்கு சேரி என்று பெயர். “எந்த தெரு?” என்று கேட்பது, எந்தத் தெருவிலிருந்து வருகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்வதற்கு அல்ல. நீங்கள் எந்த சாதி? என்று தெரிந்துக் கொள்ளத்தான். அதனால் தான் ரங்கசாமிக்கு கோபம் வருகிறது. அதனால் தான் வேண்டும் என்றே ‘மேட்டுத்தெரு’ என்று பதிலளிக்கிறான். இது கதையில் உவமானம் என்று சொல்வதற்கில்லை என்றாலும், வாழ்வில், யதார்த்தத்தில் ஒன்றைக் கேட்பதற்குப் பதிலாக இன்னொன்றைக் கேட்பது என்னும் வடிவில் வருவதால் இதை ஒரு உவமானமாகக் கருதலாம்.

 

இன்னொரு உவமானம் நிறம் பற்றியது. தங்கமணிக்கு ஒரு காலண்டர் கிடைக்கும். அதில் எம்ஜிஆரின் ஒளிப்படம் இருக்கும். “செக்கச் செவேலென்ற தாமரை இதழ் போன்ற முகம்.” அதை தினமும் பார்த்து வியப்புறுவான். காலண்டரிலும், மனத்திலும் இருந்த எம்ஜிஆரை, ஒரு படப்பிடிப்புக்காக போய்க்கொண்டிருக்கும் போது, நேரடியாகப் பார்க்க நேர்ந்த பொழுது, அதே “செக்கச் செவேலென்ற” முகத்தைப் பார்த்து அசந்து நிற்கிறான் தங்கமணி. இங்கு தான் ஒரு ட்விஸ்ட் வருகிறது. எம்ஜிஆர் தங்கமணிக்கு கொடுப்பது அதே செக்கச் செவேலென இருந்த ஆப்பிள்கள். சிவப்பு நிறத்தில் நமக்குத் தான் எவ்வளவு ஈர்ப்பு!

 

உவமைகள்


எம்ஜிஆரின் முகம், “செக்கச் செவேலென்ற தாமரை இதழ் போன்ற முகம்” என்று இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது தவிர வேறு உவமைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

 

கதையமைப்பு

Character Arc என்கிற கதாபாத்திரத்தின் வளைவு அல்லது பயணம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையின் முன் பகுதியில் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய எண்ணத்தை வாசகர்களுக்கு கதாசிரியர் ஏற்படுத்துவார். ஆனால் போகப் போக, அந்தக் கதாபாத்திரம் வேறு விதமாக வெளிப்பட்டு, கதையின் கடைசியில் முற்றிலும் மாறுபட்டு நிற்கும். அதன் அகத்திலும் புறத்திலும். அப்படி ஒரு கதாபாத்திரம் பன்னீரின் கதாபாத்திரம்.

 

பன்னீர் தங்கமணியையும், மற்றவர்களையும் கேலி பேசி, கிண்டல் செய்யும் கதாபாத்திரமாக அறிமுகமாவான். ‘அட போடா! குள்ள வாண்டு’ என்று கூட தங்கமணியை சீண்டுவான். மீனாட்சி ஆயாவிடம் கூட குதர்க்கமாகப் பேசுவான். நடிகர் பாலையாவை, ஆயா பார்த்திருக்க வாய்ப்பில்லை, சும்மா பொய் சொல்கிறாள் என்கிற பாணியில், ‘சும்மா கத உடாத ஆயா’ என்று ஏளனம் செய்வான். அதுவரை பன்னீர் எரிச்சல் கொடுக்கும் கதாபாத்திரமாக இருப்பான்.

 

தங்கமணி ஓட்டி வந்த மாடுகள் பள்ளம் பக்கம் போகிறது என்றதும் பன்னீரும் சேர்ந்துக் கொண்டு ஓடிப் போய் தடுத்து, சமவெளிக்குக் கொண்டு வருவான். ‘எம்ஜிஆரைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்’ என்று மீனாட்சி ஆயா கேட்டதும், மற்றவர்கள் ஏதேதோ சொல்ல, பன்னீர், “எங்க அம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு ஐநூறு ரூபா கேப்பன். அவர் குடுக்கறத எங்க அம்மாட்ட குடுப்பன். எந்த செலவு முக்கியம்னு அதுக்குத் தெரியும்” என்பான். வாசகனுக்கு பன்னீர் மேல் ஒரு அனுதாபமும் நல்லெண்ணமும் வரத்தொடங்கும்.

 

கருத்து

குழந்தைகளின் குணம்

ஒரு வாசகர் சொன்னார்: “குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்கள். அவர்களுக்குள் சண்டை வந்தாலும் மறுகணம் சமாதானமாகிவிடுகிறார்கள். பன்னீருக்கும் தங்கமணிக்கும் இடையே ஒருவருக்கொருவர் ஏளனமாகப் பேசி சண்டைப் போட்டுக் கொண்டாலும், அடுத்த கணம் நட்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.” என்றார். ஆமாம்! அந்த குணம் ஏன் நாட்டுத் தலைவர்களுக்கு இல்லை?

 

எளிய மக்களின் பண்பு

இன்னொரு வாசகர் சொன்னார்: “மீனாட்சி ஆயா அரிசி உருண்டைகள் விற்றுக் கொண்டிருக்கிறார். ஓர் அரிசி உருண்டை ஐந்து பைசா. ரங்கசாமியிடம் பத்து பைசா இருக்கிறது. ஆனால் மூன்று பேர் இருக்கிறார்கள். ஆயாவிடம் மூன்று அரிசி உருண்டைகள் கேட்கிறான். இன்னும் ஒரு அஞ்சு பைசா? என மீனாட்சி ஆயா கேட்க, நாளைக்கு தருவதாகச் சொல்கிறான். மூன்று அரிசி உருண்டைகளை ஆயா கொடுக்கிறார். இப்படிப்பட்ட நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா?” என்று வினவினார். அதானே! தூரத்தில் இருந்தாலும், சிறிய கடைகளில் கடன் சொல்லலாம். உங்கள் வீட்டு பக்கத்திலேயே இருந்தாலும், பெரிய மால்களில் கடன் சொல்லி ஒரு பொருளை வாங்க முடியுமா? பொருளாதாரமும் பண்பாடும் எப்படி இணைந்தே பயணிக்கிறது.

 

பிழைப்பா? முதலீடா?

மீனாட்சி ஆயா, சில வருடங்களுக்கு முன்பு, அதே லெவல் கிராஸிங் பக்கம் நின்று கொண்டிருந்த போது, நடிகர் பாலையா அங்கு வந்ததையும், அவர் ஆயாவுக்கு நூறு ரூபா கொடுத்ததையும் நினைவு கூர்கிறார். அந்த நூறு ரூபாயில் தான், தன் வீட்டின் கூரையை மாத்தினதாகவும் சொல்கிறார். அப்பொழுது ரங்கசாமி, “தப்பு பண்ணியே ஆயா! அந்த நூறு ரூபாயில ஒரு மாடு வாங்கியிருந்தா இப்போ மாடு கன்னுகுட்டி, மாடு கன்னுகுட்டின்னு பெருத்துகிட்டே போயிருக்கும்.” என்று சொல்லிவிட்டு, “நாங்களும் இப்போ ரெட்டியார், படையாட்சி மாடுகளோடு ஓன் மாட்டையும் ஒட்டிகிட்டு இருப்போம்” என்று சொல்கிறான்.

 

ரங்கசாமி சொல்கிற சேமிப்பு, முதலீடு, செலவு பொருளாதாரம் உற்று நோக்க வேண்டிய பொருளாதாரம். வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்ட ஆயா, அந்த நூறு ரூபாயில் தன் வீட்டு கூரையை மாற்றியிருக்கிறார். சேமிக்கவோ, மூலதனம் போட்டு மாடு வாங்கவோ அவருக்கு யோசனை இல்லை. ஏழைகள் ஏழைகளாக இருப்பது இப்படி யோசிக்காமல் போனதால் தான் என்கிற மாயையை இது உருவாக்காதா? அல்லது, வாயிக்கும் வயித்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் ஏழைகள் எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும், என்று வாசகர்களை யோசிக்க வைக்கிறாரா? இப்பொழுது மாடுகள் நிறைய வைத்திருக்கும் சமூகங்களுக்கு எப்படி சொத்து வந்தது? நீங்களாக இருந்தால் அந்த நூறு ரூபாயில் என்ன செய்திருப்பீர்கள்?

 

யார் வள்ளல்?

நடிகர் பாலையாவும், எம்ஜிஆரும் தான் வள்ளல்களா? கதாசிரியர் வேறு மாதிரி நினைக்கிறார். வள்ளல் கதையின் எளிய கதாபாத்திரங்களின் வள்ளல் தனத்தை தனக்கேயுரிய ‘இயல்பு’ பாணியில் வரைகிறார்.

முதலில் மீனாட்சி ஆயா, திடீர் என்று, ஒவ்வொரு பையனுக்கும் ஓர் அரிசி உருண்டையைக் கொடுக்கிறாள். ஏற்கனவே ஐந்து பைசா கடன் என்று அவர்கள் நினைவு படுத்தியும், இதை நான் உங்களுக்கு இலவசமாகத்தான் கொடுக்கிறேன் என்கிறாள் வள்ளல் மீனாட்சி ஆயா.

 

அடுத்து தங்கமணி. ஆயாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் ஓட்டி வந்த சினை மாடு தவிப்பதைப் பார்த்து விட்டு, அதனருகே ஓடிச் சென்று, வாயில் உள்ள நுரையைத் தள்ளி விட்டு, புங்க மரத்தின் நிழலுக்கு ஓட்டிச் சென்று, பானையில் நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துவான். அப்போதைக்கு அந்த மாட்டிற்கும் பிறக்கப் போகிற கன்றுக்கும் தங்கமணி தான் வள்ளல்.

 

தங்கமணிக்கு எம்ஜிஆர் சில ஆப்பிள்களை எடுத்துக் கொடுக்கிறார். இவன் வேண்டாம் என்று பின் வாங்குகிறான். அவர் ‘நல்லா படிக்கனும்’ னு சொல்லி அவன் கையில் திணிக்கிறார். அதை அவன் எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கிறான்.ஒன்று ரங்கசாமிக்கு. ஒன்று அரிசி உருண்டைகளை இலவசமாக அள்ளிக் கொடுத்த ஆயாவுக்கு. இன்னொன்று பன்னீருக்கு. மற்றொன்று சுகமில்லாத பன்னீரின் அம்மாவுக்கு. மற்றொன்று சினை மாட்டிற்கு. மனிதநேயமும் உயிர்மநேயமும் கலந்ததுதான் எளிய மக்களின் வாழ்க்கை என்று பாவண்ணன் சொல்லாமல் சொல்கிறார்.

 

*******

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page