சிவப்புக்கல் மோதிரம் - கதை வாசிப்பு அனுபவம்
- உயிர்மெய்யார்
- Aug 12
- 3 min read

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு
சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)
உவமானங்களும் உவமைகளும்
கதையமைப்பும் கருத்துகளும்
சிவப்புக்கல் மோதிரம்
உயிர்மெய்யார்
12.08.2025
கதைச் சுருக்கம்
கதிர் தமிழ் வீட்டிற்குப் போகிறார். தமிழின் மனைவி கல்யாணி வரவேற்கிறார். செல்வமும் நிர்மலாவும் தமிழ்-கல்யாணி தம்பதியரின் பிள்ளைகள். தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழுக்கு நிச்சயம் செய்த கலைச்செல்வி இறந்துவிட்டதாக ஒரு போஸ்டர் பார்த்ததாக கதிர் சொல்கிறார். தமிழ் இடிந்து போகிறார்.
பின் கதை. தமிழ் நன்கு பாடுவான். அதனால் ஒரு இசைக்குழுவை அமைத்து ஊர் ஊராக கச்சேரி செய்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, அதன் உறுப்பினர்கள் வேறு வேறு வேலைக் கிடைத்துப் போக, இசைக் குழு இல்லாமல் போகிறது. தமிழின் அப்பாவும் கலைச்செல்வியின் அப்பாவும் ஒரே அரசியல் கட்சியில் இருக்கிறார்கள். தமிழுக்கும் கலைச்செல்விக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்தேதிக்குள் கட்சி இரண்டாக உடைந்து விடுகிறது. அதனால் கல்யாணம் நின்று போய் விடுகிறது. அதற்குப் பிறகு தமிழ் திருமணமே செய்யாமல் இருந்தான்.
ஒரு தடவை, கடற்கரையில், கதிரை கலைச்செல்வி சந்தித்து, பெரியவங்க கட்சி பார்க்கலாம், தமிழ் என்னுட்ட வந்து நீ தான் வேணும்னு சொல்லியிருந்தா நா வந்திருப்பேன். வாழ்ந்தா அவரோடதான் வாழனும்னு இருந்தேன், அவர் போட்ட மோதிரம்ங்றதுனால தான், நான் அத போட்டிருக்கேன் என்று சொல்லி அழுகிறாள். மறுபடி சில வருடங்களுக்குப் பிறகு, கதிர் தன் பிள்ளைப் படிக்கும் பள்ளிக்குச் சென்றிருந்த போது, கலைச்செல்வி தன் மகளுடன் வந்திருந்தாள். அப்பொழுதும் அந்த சிவப்புக்கல் மோதிரம் அவள் கையில் இருந்தது . கலைச்செல்வி தமிழைப் பற்றி விசாரித்தாள். தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று மட்டும் கதிர் சொன்னான். உங்க நண்பரை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க என்று கரிசனையுடன் சொன்னாள். மறுபடி சில வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளியில் ஆண்டு விழாவில் இரண்டாவது மகளோடும், மற்றொரு தடவை லெவல் கிராஸிங்கிலும் பார்த்த பொழுது தமிழைப் பற்றிக் கேட்கவேயில்லை.
கலைச்செல்வியைக் கடற்கரையில் சந்தித்தையும், பள்ளிக்கூடத்தில் இரண்டு முறை சந்தித்ததையும், பிறகு லெவல்கிராஸிங்கில் சந்தித்தையும், கதிரி தமிழிடம் சொல்லவில்லை. தமிழின் அப்பா கதிரிடம் தன் சோகத்தைச் சொல்லி அழ, பிறகு தமிழுக்கு வேறு கல்யாணம். இரண்டு பிள்ளைகள்.
இன்று கலைச்செல்வியின் சாவுக்கு மாலையைக் கட்டிக் கொண்டு கதிரும் தமிழும் கிளம்புகிறார்கள். வழியில் சாக்கடையில் துருவி பலப் பொருட்களை எடுத்து வெளியே போடுகிறார்கள். அதில் ஒரு மோதிரம் இருக்கிறது. ஒரு கோயிலைக் கடந்து போகிறார்கள். அந்தக் கோயிலில் தான் தன் நிச்சயதார்த்தத்திற்கு போட்ட ஒரு சிவப்புக் கல் மோதிரத்தை உண்டியலில் போட்டிருந்தான் தமிழ். வழியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருந்த கலைச்செல்வியின் உருவத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ். சாவு மேளம் கேட்கிறது. அந்தத் தெரு முனையில் வந்ததும், ‘கதிர்! வேணாம் வா. திரும்பிவிடலாம்’ என்று சொல்லி கையிலிருந்த மாலையை எடுத்து போஸ்டர் முன் வைத்துவிட்டு திரும்புவதாக கதை நிறைவறுகிறது.
கதை வாசிப்பு அனுபவம்
எடுத்த எடுப்பிலேயே ஓர் உவமானம். தமிழ் வீட்டின் முன்னே ஒரு மகிழ மரம். பழைய பூக்கள் மேல் புதிய பூக்கள் விழுந்து கிடக்கின்றன. ‘இன்றைக்கு என்ன பூ மழையா?” என்ற கேட்டுக் கொண்டு கதிர் உள்ளே நுழைகிறார். கலைச்செல்வி என்ற பழைய பூவின் மீது, இன்று புதிய பூ போட வேண்டிய நாள் இது. கலைச்செல்வி இறந்துப் போய்விட்ட செய்தியைத் தமிழுக்குச் சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று கதிர் தவிப்பான். “காலையில வில்லிநூரு ஆத்தங்கரை வரைக்கும் வாக்கிங் போனேன்…” என்று சொல்லி நிறுத்தும் போது, அந்த மகிழ மரத்திலிருந்து ஒரு பூ, உச்சிக் காம்பிலிருந்து பிரிந்து, காற்றில் மெதுவாக அசைந்து அசைந்து இறங்கி தரையில் உதிரும். அட! என்ன வர்ணனை!! என்ன உவமானம்!!!
கலைச்செல்வி வீட்டிற்குப் போக, இருவரும் கிளம்பி வெளியே வருகிறார்கள். அங்கே சாலையின் திருப்பத்தில் ஒரு ஜேசிபி இயந்திரம் நிற்கும். சாக்கடைக்குள் இருக்கும் கசடுகளை அள்ளி வெளியே போடும். ஒரு வாசகர், “இது தமிழின் மனத்தில் இருக்கிற பழைய நினைவுகளை கிளறி விடுவதற்கான உவமானமோ?” என்று கேட்டார். அந்தச் சாக்கடைக் கசடுகளில் சில மோதிரங்கள் கிடைக்கும். அதை அப்பகுதி சிறுவர்கள். “டேய்!…மோதிரம்டா..” என்று கத்திக்கொண்டே எடுத்துப் போவார்கள். அடுத்து கலைச்செல்விக்கும் தமிழுக்கும் நிச்சயமான போது போட்டுக்கொண்ட சிவப்புக்கல் மோதிரம் பற்றி கூறுவதற்கு முன்னோடியாக, போகிற போக்கில் ஒரு காட்சியை விவரிப்பார் பாவண்ணன்.
இருவரும் ஒரு பாலத்தில் ஏறி இறங்குவார்கள். அங்கு ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். எப்பொழுதும் சாமி கும்பிட அந்தக் கோயிலுக்குப் போகும் தமிழ் அன்றைக்கு அந்த மாரியம்மன் கோவில் பக்கம் தன் பார்வையை திருப்பாமல் போவான். ஏன்? அதற்குப் பழையக் கதைக்குப் போக வேண்டும். அவர்களின் நிச்சயத்திற்குப் பிறகு, அவர்கள் தந்தையர் சார்ந்திருந்த கட்சி இரண்டாகப் போனதால், அவர்களின் திருமணமும் நின்று போய்விடுகிறது. அதனால் அது சம்பந்தமான எல்லாப் பொருட்களையும் இரண்டு குடும்பங்களும் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அதில் ஒன்று அந்த நிச்சயதார்த்த மோதிரம். அதை தமிழின் அம்மா, அந்த மாரியம்மன் கோவில் உண்டியலில் போட்டுவிடுவார். அதனால் தான் அந்த கோயில் பக்கம் பார்க்காமல் பயணிப்பான் தமிழ்.
ஓரிடத்தில் நிறுத்தி ரோஜாப்பூ மாலை ஒன்றை வாங்கிக்கொள்வார்கள். தொடர்ந்து பயணிக்கும் போது, முன் கதையைச் சொல்வார் பாவண்ணன். தமிழின் நண்பன் கதிரை, கலைச்செல்வி, அதற்குப் பிறகு மூன்று முறை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திப்பார். முதல் தடவையே கேட்பார்: “அப்பா அம்மா சொன்னா அப்படியே விட்டுட்டு போயிடறதா? நமக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்குதா இல்லையா? பெரிசுகள விடு. நீ என்ன சொல்றன்னு என்னுட்டல்ல கேட்டிருக்கனும். கேட்டிருந்தா அந்த நிமிஷமே வீட்டை விட்டு வரத் தயாரா இருந்தேன்” என்று கேட்பார். தொடர்ந்து, “அவர் கையில கொஞ்ச நாள் இருந்த மோதிரம்-ங்றதுக்காகத்தான் இன்னமும் நான் அத போட்டுருக்கேன். இதனால வீட்டுல எவ்வளவு பிரச்னை…” என்று சொல்வாள்.
தமிழிடம் ஒரு கேள்வி. “ஏன் தமிழ்? ஏன் கலைச்செல்வியை ஒரு தடவைக் கூடப் போய் இப்படிக் கேட்கவில்லை?”
அதே நேரம் கதிரிடமும் ஒரு கேள்வி. “ ஏன் கதிர்? மூன்று முறை நீங்கள் கலைச்செல்வியைப் பார்த்தும், அப்படி அவள் சொன்னாள் என்று உங்கள் நண்பருக்கு, அதான் தமிழுக்கு, ஏன் நீங்கள் சொல்லவேயில்லை?”
கலைச்செல்வியிடமும் ஒரு கேள்வி. “தமிழ் தான் கேட்கவில்லை. சரி! ஆனால், நீங்கள் ஏன் அவரைச் சந்தித்து பேசவில்லை?”
கணியன் பூங்குன்றனாருக்கு ஒரு கேள்வி. “தீதும் நன்றும் பிறர் தர வாரா…என்று எழுதினீர்களே. தமிழ் வாழ்க்கையும், கலைச்செல்வி வாழ்க்கையும் இப்படி ஆனதற்கு அவர்கள் மட்டுமா பொறுப்பு? ஏதோ இரண்டு அரசியல் கட்சிகள் உடைந்ததற்கு, இவர்கள் என்ன செய்வார்கள்?”
இருவரும் கலைச்செல்வி வீடு இருக்கும் வீதிக்கு வந்துவிட்டார்கள். ஆனால், கடைசியில் மாலையைப் போடத் திராணியில்லாமல் திரும்பி வந்துவிடுகிறான் தமிழ். கலைச்செல்விக்கு அந்த மாலையும் கிடைக்க வில்லை. இந்த மாலையும் கிடைக்கவில்லை.
என்ன தமிழ்? இப்படிச் செய்து விட்டீர்கள்?
சிவப்புக்கல் மோதிரம்
வருகிறது ஆத்திரம்.
**********
Comentários