top of page

கலைமாமணி - கதை வாசிப்பு அனுபவம்

ree

எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய “நயனக்கொள்ளை” சிறுகதைத் தொகுப்பு

சந்தியா பதிப்பகம், சென்னை. (2023)

 

உவமானங்களும் உவமைகளும்

கதையமைப்பும் கருத்துகளும்

 

உயிர்மெய்யார்

12.08.2025

மெல்பர்ன்

கதைச் சுருக்கம்

 

இவனும் தம்பியும் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தமுக்கு அடிக்கப்படுகிறது. ராமலிங்க ஐயாவோட அபிமன்யு வதம் கூத்து நடைபெறப் போவதாக அறிவிப்பு. இவனோட அப்பா ராமலிங்க ஐயாவோட பரம ரசிகர். ஐயாவைப் பற்றி அப்பா எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வந்தது. அதற்காக ராமலிங்க ஐயா வீட்டுக்கே வந்து நன்றி சொன்னார்.

 

அரசாங்கத்திடமிருந்து பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது கிடைக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், ராமலிங்க ஐயாவுக்கும் கலைமாமணி விருது கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அப்பா யோசிக்க ஆரம்பித்து விட்டார். அப்பாவின் மச்சான் (மாமா) ஒருவர் அரசியல்வாதி. அவரை எதேச்சையாக விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்தில் பார்த்த பொழுது கலைமாமணி விருது பற்றிக் கேட்க, அடுத்த வாரம் அவரை வந்து பார்க்கச் சொன்னார் மாமா.

 

அடுத்த வாரம். இரண்டு சக்கர வண்டியில் விழுப்புரத்துக்கு கிளம்பினார்கள். மாமா இவர்களை அழைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்குச் சென்றார். பெரிய வீடு. அப்பா செய்தியைச் சொல்லிவிட்டு கோப்பையும் கொடுத்தார். நிச்சயமாகச் செய்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் வாக்கு கொடுத்தார். அப்பா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அம்மா நம்பவில்லை.

 

பத்து நாட்கள் கழித்து, விருது பெற்றவர்களின் பெயர்களை அறிவித்த பொழுது ராமலிங்க ஐயாவின் பெயர் இல்லை. அப்பா அதிர்ந்து போய்விட்டார். அடுத்த வருடம் கோப்பை நாலைந்து பிரதிகள் எடுத்துக் கொண்டு அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அடுத்த வருடமும், அதற்கு அடுத்த வருடமும் கூட அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அப்பா கலங்கிப் போய் வீட்டில் முடங்கி விட்டார். ராமலிங்க ஐயாவே வந்து அரசாங்க விருதுகளை விட ரசிகர்களின் ஆதரவும் கைத்தட்டுமே பெரிது என்று சொல்லி விளக்க, மறுபடி அப்பா ஒரு காணொளி எடுக்கும் ஆளை அழைத்து வந்து ராமலிங்கம் ஐயாவின் நிகழ்ச்சிகளை காணொளி எடுத்தார்.

 

காணொளிகளை வெட்டி திருத்தி ஒரு குறும்படமாக எடுத்துக் கொண்டு, கோப்பையும் சேர்த்து நேரடியாக அதிகாரியிடம் கொடுத்தும் அந்த வருடத்திலும் அவர் பெயர் வரவில்லை. அப்பா மனம் தளராமல், ஐயாவைப் பற்றி எழுதிய கட்டுரையெல்லாம் திரட்டி ஒரு நூலாக அச்சடித்து வெளியிட்டார். அப்பொழுது ‘அபிமன்யு வதம்’ என்றால் என்ன என்று தம்பி கேட்க, ஒருவனை நிறையப் பேர் சுத்தி நின்னு அடிச்சிக் கொல்றது தான் வதம் என்பது. சக்கரவியூகத்துக்குள் போன அபிமன்யுவுக்கு அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் போனதால் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போகிறான் என்று அப்பா விளக்கினார்.

 

அவர்கள் ஊரில் அபிமன்யு வதம் கூத்து தொடங்கியது. அன்றைக்கு இரவு திரௌபதி சபதம். அடுத்த நாள் பத்திரிக்கையில் ராமலிங்கம் ஐயாவுக்கு கலைமாமணி விருது கிடைத்த செய்தி வந்திருந்தது. அதை எடுத்துக் கொண்டு அப்பாவும் பிள்ளைகளும் அவரிடம் சொல்ல ஓடினார்கள். உடனே சென்னை சென்று விருதைப் பெறவேண்டும் என்றும் இன்று இரவே சென்னைக்குப் போகவேண்டும் என்று அப்பா சொன்னார். ‘அது எப்படி முடியும் இரண்டு நாள் தான் கூத்து முடிஞ்சிருக்கு. இன்னும் பத்து நாள் கூத்து இருக்கே’ என்றார் ஐயா.

 

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, மழை வேண்டி, பன்னென்டு நாள் கூத்துக்கு கை நீட்டி காசு வாங்கி, கூத்து முடிஞ்ச மறுநாள் மழை பேஞ்சுது. அன்னையிலேர்ந்து ஒவ்வொரு வருடமும் நான் தான் வரணும்னு சொன்னாங்க. நானும் வாக்கு குடுத்துட்டேன். இது வரைக்கும் மீறினதில்ல. பேரும் கெடக்கூடாது. தொழிலும் கெடக்கூடாது. அதுதான் பெரிய விரு. இந்த மெடலு, பட்டம் எல்லாம் எப்பவேணா வாங்கிக்கலாம். நீ வேணா என் சார்பா போய் வாங்கிக்கயேன்’ என்றார். அப்பா மறுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார் என்று கதை நிறைவுறுகிறது.

 

கதை வாசிப்பு அனுபவம்

 

கதைத் துவக்கத்தில் தமுக்கு வாசிக்கிறார்கள். வாசகர் வட்டத்தில் ஒருவர் கேட்டார்: “தமுக்கு என்பது முரசு போல இருக்குமே, அதனுடைய குட்டி வடிவம் தானே?” என்று கேட்டார். அவர் கேட்டது சரி தான். தமிழிசைக் கருவிகளில் தோல் கருவிகள், நரம்புக் கருவிகள், காற்றிசைக் கருவிகள், கஞ்சக் கருவிகள் மற பிற கருவிகள் இருக்கின்றன. வாசகர்களின் வசதிக்காக சில எடுத்துக்காட்டுகளை இங்கு கொடுக்க விரும்புகிறேன். பறை, கஞ்சிரா, பம்பை, பேரிகை, முரசு, பஞ்சறை மேளம், மண்மேளம், மத்தளம், மிருதங்கம், தவில், உறுமி, ஆகுளி, கொடுகொட்டி போன்றவை தோற்கருவிகள். வீணை, யாழ், தம்புரா, கோட்டு வாத்தியம், கின்னாரம் போன்றவை நரம்புக் கருவிகள். கொம்பு, தாரை, நாதசுவரம், புல்லாங்குழல், சங்கு, மகுடி, முகவீணை, எக்காளம், கொக்கரை, மோர்சிங் போன்றவை காற்றிசைக் கருவிகள். தாளம், சேகண்டி போன்றவை கஞ்சக் கருவிகள். கொன்னைக்கோல், கடம் போன்றவை இன்ன பிறக் கருவிகளில் சேரும்.

 

போன வாரம் மெல்பர்னில் சங்கத்தமிழ் கலையகத்தார் பயிற்சி எடுக்கும் இடத்திற்குச் சென்றிருந்தேன். மெல்பர்ன் வாசக வட்ட நண்பர்கள் சேசுராஜ், மெல்வின் ஆகியோரிடம் நான் விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், என்னை வரச்சொல்லியிருந்தார்கள். பெண்களும், ஆண்களும், இளைஞர்களும், சிறுமிகளுமாக கூடியிருந்தார்கள். வட்டமாக நின்றார்கள். நான் ஓர் ஓரமாக உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோருடைய கையிலும் ஒரு பறை இருந்தது. ஒரு பெண்ணின் கையில் பெரிய முரசு இருந்தது. இன்னொருவர் சிறிய தமுக்கு ஒன்றை வைத்திருந்தார். ஒருவர் ஒரு தாளத்தை வாய்ப்பாடாகச் சொல்ல, அனைவரும் அடித்தனர். நான் கண்களை மூடிக் கொண்டேன். அவர்களின் பறையிலிருந்து இசையொலி, சாரலாகத் துவங்கி, தூறலாக மாறி, சோ’வனெ பெய்து, இடி மின்னல் தோன்றி, அடைமழை அடிக்க, திரும்ப மழையின் வேகம் குறைந்து, தூறலுக்கும் சாரலுக்கும் வந்து நின்றது. என் கண்களைத் திறந்த போது என் உடை நனைந்திருந்தது. இசை மழையில்.

 

நண்பர் சேசுராஜ் என்னைத் தனியாக அழைத்துச் சென்று, “முதல் நிலையில் முதல் அடி இது தான். எங்கே உங்கள் தொடையில் தட்டுங்கள்” என்று சொல்லி “த-குகுகு த-குகுகு த-குகுகு தத…” என்று தன் தொடையைத் தட்டி என் பறைக் கற்றல் அனுபவத்தைத் தொடங்கி வைத்தார். “அட! பறையில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா?” என்று வியந்துக் கேட்டேன். என்னைப் பயிற்சி செய்யச் சொல்லிவிட்டு குழுவோடு பறையடிக்கச் சென்றார்.

 

அப்போழுது நண்பர் மெல்வின் வந்தார். தன்னிடம் இருந்த இரண்டு பறைகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “வாங்க…தொடையில் தட்டுவதை பறையில் அடியுங்கள்” என்று சொல்லி “ த த த-குகுகு” என்று முதல் நிலையில் உள்ள அடுத்த அடிகளைச் சொல்லிக் கொடுத்தார். அதைப் பயின்றுக் கொண்டேயிருக்கும் போது, இருவரும் “வாங்க…ஜோதியில கலந்துக்குங்க…” என்று சொன்னபோது நானும் அங்கிருந்த பதினைந்து பேரோடு இணைந்துக் கொண்டேன். அவர்கள் மலையுச்சியில் இருந்து பறையடித்தார்கள். நான் மலையடிவாரத்தில் இருந்து பறையடிக்கத் துவங்கினேன்.

சங்கத்தமிழ் கலையத்தார் அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு தான், மேலே சொன்ன பல தமிழிசைக் கருவிகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும், ஏழெட்டு வருடங்களாக மெல்பர்னில் தமிழிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றும் தெரிய வந்தது. “இந்த பறைய எடுத்துட்டுப் போங்க. வீட்டுல அடிச்சிப் பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

 

கதையில் தமுக்கு என்ற ஒரு சொல், என்னை இவ்வளவு எழுத வைத்துவிட்டது.

 

கதைக்கு வருவோம். ராமலிங்க ஐயா கூத்துக் கலைஞர். இந்தப் பையன்களின் அப்பா அவரின் ரசிகர். அப்பாவின் பெயர் பலராமன். ராமலிங்க ஐயாவிற்கு எப்படியாவது கலைமாமணிப் பட்டம் வாங்கித் தரவேண்டும் என்று பலராமன் மெனக்கெடுகிறார். இந்தக் கூத்துக் கலைஞர் ஏன் இங்கு வந்து பிறந்தார்? வேறு எங்காவது பிறந்திருந்தால் இந்நேரம் அவரைத் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிற பலராமன் ஓர் உவமையை உபயோகிக்கிறார். “கண்ணை மூடிகினு கடவள் தூவுன வெத மாதிரி இந்த ஊர்ல வந்து பொறந்துட்டாரு…” என்கிறார்.

 

பலராமன் ராமலிங்கம் ஐயாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிப் பத்திரிக்கையில் வந்ததும், பலராமன் வீட்டிற்கே வந்த ராமலிங்கம், “என் வீட்டுலயே எனக்கு மரியாதை இல்ல… என்னையும் சரி, என் கலையையும் சரியா புரிஞ்சிக்கமாட்டேங்குறாங்க…” என்று சொல்வார். “அது சரிதான்! கூட இருப்பவர்களுக்கு நம் அருமை பெருமை தெரியாது. நம் தவறுகள் தான் தெரியும். ஊர்ல நமக்கு பெத்த பேரு! ஆனா வீட்டுல நம்ம பூஜ்யம்..” என்றார். யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

 

பத்திரிக்கையில் செய்தி போட்ட பிறகு, ராமலிங்கம் ஐயாவைப் பற்றி, கோப்பு ஒன்றைத் தயாரித்துக்கொண்டு அரசியல்வாதியைப் பார்த்து முறையிடுகிறார் பலராமன். அவர் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் பலராமனின் மனைவி, ஓர் உவமானத்தைச் சொல்லி, ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கையிடுகிறார். அது என்ன உவமானம் தெரியுமா? “கோழி முட்டைங்கள அவையத்துக்கு வைக்கிறமாதிரிதான் இந்த விருதுக்கு ஆள எடுக்கிற விவகாரம். ஒன்னு ரெண்டுதான் குஞ்சு பொரிக்கும். மத்ததுலாம் கூழைமுட்டைதான்” என்பார்.

 

முதலில் பத்திரிக்கை. பிறகு அரசியல்வாதி. அடுத்து ஒரு குறும்படம் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுத்தல். பிறகு ராமலிங்கம் ஐயாவைப் பற்றிய நூலொன்று தயாரித்தல் என பலராமன் பல வருடங்களாக வெவ்வேறு முயற்சிகள் எடுக்கிறார். பனிரெண்டு நாட்களுக்கு கூத்து நடத்த ஒத்துக்கொண்டு கூத்தைத் துவங்கிய ஒரு நாளில் அவருக்கு கலைமாமணி விருது தருவதாக செய்தி வருகிறது. ஆனால் அன்றைய நாளில் போய் விருதை வாங்க அவர் போக மறுக்கிறார். காரணம், கொடுத்த வாக்கு தான் தனக்கு முக்கியம் என்கிறார்.

 

எங்கள் தந்தை கூறுவார், “தம்பி! வாய்க்குள் போவதிலும், வாயிலிருந்து வெளி வருவதிலும் கவனமாக இரு” என்று சொல்வார். “நீ மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழ வேண்டுமென்றால் இரண்டு இரண்டு விதிகள் தான். ஒன்று கொடுத்த வாக்கை நிறைவேற்று. இரண்டாவது வாக்கு கொடுக்காதே” என்பார்.


ஒரு வாசகர் சொன்னார்: "ஒரு கலையில் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறார் பாருங்கள். விருதுகள் போன்ற மேல் பூச்சுகள் தேவையில்லை. கலை மீது ஆர்வமும், தன் தொழில் மீது அர்ப்பணிப்பும் மட்டுமே போதும்."


இன்னொரு வாசகர் சொன்னார்:"பலராமனைப் பாருங்கள். தன்னலமில்லாமல் இருக்கும் பண்பு. இன்னொருவருக்காக, இன்னொருவருக்குப் பெயர் வரவேண்டும் என்பதற்காக, இன்னொருவருக்கு விருதும் பாராட்டும் கிடைக்கவேண்டும் என்பதற்காக, மனம் தளராமல் போராடுகிறார் பாருங்கள்."

 

கலைமாமணி!

உன் வழி தனி!

*******

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page