top of page

அவரும் அலாரம் கடிகாரமும்

ree

ஈராக்கின் கிறிஸ்து - உலகச் சிறுகதைகள் - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன் - எதிர் வெளியீடு - 2023.

 

அவரும் அலாரம் கடிகாரமும்

 

அலாரம் அலறுவதற்கு முன் அவன் எழுந்துக் கொள்கிறான். மணி அதிகாலை நான்கு. அன்றைக்கு வேலைக்குப் போகவேண்டும். அவனுடைய அம்மா, அத்தை, தங்கை என எல்லோரும் ஏதாவது ஓர் உதவி செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஓர் அங்கியைப் போட எத்தனிக்கும் போது, “அதை மேலாளரைப் பார்க்கும் போது போட்டாய். மற்றதைப் போடு” என்று அம்மா சொல்கிறாள். பெண்களுக்கு எப்படி இவ்வளவு தூரம் நினைவில் இருக்கிறது என்று மலைத்துப் போகிறான்.

 

என் மனைவியைக் குறித்து இது போன்று நான் திகைத்திருக்கிறேன். இது அவர்கள் அன்றைக்கு இதற்காகக் கொடுத்தது. அது இவர்கள் அன்றைக்கு அதற்காகத் தந்தது. என்று அச்சுப் பிசகாமல், நிறம், அளவு, ஆள், நாள், சூழல் விவரணங்களை எப்படி இவர் சொல்கிறார் என்று அசந்துப் போயிருக்கிறேன்.

 

அவன் பெயர் ஃபாதி. சவரம் செய்துக் கொண்டிருக்கும் போது, யாரோ “ஃபாதி எழுந்துவிட்டீரா?” என்று கேட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். அத்தையும் அவனும் போய் கதவைத் திறக்கும் போது, அந்த யாரோ இருளில் மறைந்து விட்டார்கள். ஃபாதியின் வேலை மிக முக்கியமானதாகத் தான் இருக்கும் இல்லையென்றால் அரசாங்கத்திலிருந்து இத்தனைக் காலையில் வந்து எழுப்புவார்களா? என்று அத்தை பெருமை பேசுகிறாள். இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறான். ஊர் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவன் வீட்டை விட்டு கிளம்புகிறான்.

 

பகலில் இரைச்சலாகக் கிடக்கும் ஒரு சந்தையை, தற்பொழுது ஆளரவமற்ற நிலையில் கடந்து, ஊருக்கு அந்தப் பக்கம் இருக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்கிறான். புதிய முதலாளி கொடுத்த டிக்கெட்டைக் கொண்டு ரயிலில் ஏறுகிறான். பணித்தளத்திற்குச் சென்று வேலையில் இறங்கிய பொழுது அவன் மிகப்பெரிய கம்பெனியில் ஒரு தூசு போல உணர்கிறான். இப்பொழுது அத்தை அவனைப் பார்த்தால், “இவனுக்கு இரண்டு முட்டைகளே அதிகம்” என்று நினைத்திருப்பாள் என்ற நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது. சரி தானே! வீட்டில் ஓர் இயக்கம். ஒரு சூழல். ஓர் உறவுப் பின்னல். ஆனால் வேலையில் வேறோர் இயக்கம். வேறொரு சூழல். வேறோர் உறவுப் பின்னல்.

 

தினமும் அலாரத்திற்கு முன் எழுந்திருப்பது. யாரோ ஒருவர் கதவைத் தட்டி எழுந்துவிட்டாரா எனப் பார்ப்பது. சவரம் செய்துக் கொண்டு, முட்டை தின்று விட்டு, சந்தையைத் தாண்டி, ரயிலில் ஏறி…. என பத்து மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கதவைத் தட்டுபவரைப் பார்க்கவேயில்லை. அவருக்கென்று ஒரு பெயர் இருக்கவேண்டுமே… இன்றைக்குப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்கிறான்.

 

அன்றைக்கு கதவைத் தட்டும் போதே திறந்து விடுகிறான். ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு கருப்பு அங்கியில் இருக்கிறார். வீட்டிற்குள் அழைக்கிறான். “இல்லை. இன்னும் பலரை எழுப்பி விட வேண்டும்” என்று சொல்லிவிட்டு இருளுக்குள் மறைகிறார்.

 

அப்துல்லா என்கிற புதிய நண்பரிடம் அவரைப் பற்றி விசாரிக்கிறான். ஃபௌத் என்பவனது தந்தை தான் அவர். அவர் சந்தையில் ஒரு நூல் கடை வைத்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபௌத், இதே போல வேலைக்குப் போகும் போது, சற்றுத் தாமதமாக ஓடிச் சென்று, ரயிலில் ஏற எத்தனிக்கிறான். ஆனால் கைப்பிடி நழுவி ரயிலின் சக்கரங்களில் அடிபட்டு இறந்து போகிறான். அதனால் அன்றையிலிருந்து அவர் அதிகாலை எழுந்து, அந்தக் கிராமத்திலிருந்து வேலைக்குக் கிளம்பும் மற்று இளைஞர்களை முன்னமேயே கதவைத் தட்டி எழுப்பிவிடுகிறார் என்று அப்துல்லா சொல்கிறான்.

 

இந்த இடத்தில், நூலை மேசை மீது வைத்துவிட்டேன். கதையைத் தொடர்ந்துப் படிக்க மனமில்லை. என்ன மனிதர் இவர்!

 

இப்பொழுதெல்லாம் அவன் அலாரம் வைப்பதில்லை. அந்த மனிதரின் கதவுத் தட்டலுக்குக்காகக் காத்திருக்கத் துவங்கியிருந்தான்.

 

சில நாட்கள் கழித்து, ஒரு மழை நாள் வந்தது. அன்றைக்கு மழையின் காரணமாக சற்றே தாமதமாக வந்தது கதவு தட்டல். “இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. ரயில் நிலையத்திற்கு ஓடு” என்றார். சந்தையைத் தாண்டி விரைந்த போது, ஃபௌத் சக்கரங்களுக்கிடையே அடிபட்டு இறந்த காட்சி முன்னுக்கு வந்தது. ரயிலில் ஏறிவிட்டான். ஆனால் ரயில், ஏதோ சில தொழிற்நுட்பக்காரணங்களால் தாமதமாகவே கிளம்பியது. அது அவனுக்கு நல்லதாகப் போய்விடுகிறது. அப்பொழுது தான் அவன் கவனித்தான் அந்த நடுத்தர வயது மனிதனும், மழையில் நனைந்த அங்கியோடு அங்கே நிற்கிறார். அவன் சரியான நேரத்திற்கு வந்து ரயிலைப் பிடித்துவிட்டானா என்று பார்க்கத்தான் அங்கு வந்ததாக இவன் நினைத்துக் கொள்கிறான்.

 

அடுத்த இரண்டு நாட்கள் அவர் வந்து கதவு தட்டவேயில்லை. சந்தைக்குச் சென்று அவருடையில் கடையில் விசாரிக்க போக, கடை மூடியிருந்தது. அப்துல்லாவோடு அவர் வீட்டுக்குச் செல்ல…ஓர் அறையில் அவர் இறந்து கிடந்தார்.

 

எதிர்பார்த்த முடிவாக இருந்தாலும், மகன் இறந்த பிறகு, மற்றவர்களை முன்னமேயே எழுப்பிவிடும் அவரது கதவு தட்டும் ஒலி என் காதில் நுழைந்து மனதை பிசைந்துக் கொண்டேயிருக்கிறது.

 

**********

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page