John B. Parisutham

Jan 2, 20211 min

5. பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்

பாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம்
 
தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி
 
சீண்டிய தோல்வியை சீரழித் திடவே சிரித்தான் கவலை வற்றி - தடைத்
 
தாண்டியே போக தினமும் கொண்டான் திலகம் இட்ட நெற்றி
 

 
பாட்டியும் சொன்னாள் பாரினில் வெற்றி தனி ஒரு நபருக்கில்லை - பலர்
 
கூட்டமாய் கொள்வது மட்டுமே வெற்றி மற்றது வெற்றி இல்லை
 
நாட்டினில் தனி நபர் வெற்றி கொள்வது சகஜம் என்றான் பாண்டி - இல்லை
 
ஏட்டினில் உள்ளதை மாற்றி அமைத்திடு நல்லது என்றாள் பாட்டி.
 

 
ஊரினில் பொங்கல் திருவிழா வருது ஓட்டப் பந்தயம் இருக்க - நான்
 
ஓடியே முதலில் சீறியே வருவேன் வெற்றிக் கனியை பறிக்க
 
என்றவன் பாண்டியன் கூடவே ஓடிட எட்டு பேர் நின்றனர் கோட்டில்
 
வென்றவன் பாண்டியன் நின்றவர் மகிழ்ச்சியை எப்படிச்சொல்வது பாட்டில்?
 

 
சிறப்பிது பாண்டியா என்றனர் ஊரார் கண்களில் நீரைத் தேக்கி - அவன்
 
சிங்கத்தின் பார்வை கொண்டிட சிலிர்த்தான் இரண்டு கைகளைத் தூக்கி
 
பாட்டியோ சின்ன புன்னகை கூட உதிர்க்கவில்லை ஏனோ? - அவன்
 
போட்டியாய் ஓடி ஜெயிச்சது எல்லாம் போனதே, எல்லாம் வீணோ?
 

 
முதியவர் இருவரை கோட்டினில் நிறுத்தி மூவரும் ஓடச் சொன்னார் - இது
 
சதியென மற்றவர் நினைத்திட பாண்டியன் சட்டென கோட்டில் நின்றான்.
 
ஒன்று இரண்டு மூன்று என்றதும் பாண்டியன் ஓடியே வென்றான். - ஆனால்
 
நன்று இதுவல்ல என்று ஊரார் மௌனம் ஏனோ ஆனார்.
 

 
கையைத் தட்டி மகிழ்ந்த கூட்டம் அமைதியாய் ஆனது ஏனோ? - என
 
ஐயமும் வருத்தமும் கூடிட பாண்டியன் கலங்கியே நின்றுவிட்டானோ?
 
வையமும் வாழ்த்திடும் சொல்வதைக் கேளென பாட்டியே தேற்றி னாளே - நீ
 
மையமாய் நின்றுகொள் என்று சொல்லியே நல்லொளி ஏற்றினாளே!
 

 
இருவரின் கைகளை இறுக்கிப் பிடித்தே இறுதிக் கோட் டைந்தான் - அந்தச்
 
சிறுவனின் சிறப்பினை ஊரார் மெச்சி உச்சி முகர்ந்திட்டார்.
 
ஒருவரின் வெற்றி வெற்றியல்ல என பாண்டியன் புரிந்துக் கொண்டான். - ஒரு
 
குழுவினர் வெற்றியே வெற்றியென அவன் பாட்டி புரிய வைத்தாள்.
 

 
************
 
படிப்பினை: வெற்றி, சாதனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வெற்றி, குழு செயல்பாடு,
 
பாடல் ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம்

    70
    0